இஸ்லாமாபாத்: பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்வதற்காக பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தை, காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய விமானங்கள் தங்களது வான்வழியை பயன்படுத்த பாக். தடை விதித்தது. இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஐநா பொதுச்சபையில் வரும் 27ம் தேதி அவர் உரையாற்றுகிறார். அதே நாளில், மோடியை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஐநா சபையில் உரையாற்ற உள்ளார். 2வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் ஐநா பொதுச்சபையில் மோடி முதல் முறையாக உரையாற்ற உள்ளார்.
இதில் கலந்துகொள்ள வரும் பல நாட்டு தலைவர்களை, நியூயார்க் நகரில் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஒருவார கால சுற்றுப்பயணம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வழியே செல்ல அனுமதிக்குமாறு இந்தியா தரப்பில் முறையாக பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கோரிக்கையை அடுத்து, பாகிஸ்தானின் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்வதற்காக பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எங்கள் நாட்டு வான்வழியை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டோம் என பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார். முன்னதாக, குடியரசுத் தலைவர் வெளிநாடு செல்வதற்குப் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா, அந்நாட்டு அரசிடம் அனுமதி கோரியது. ஆனால் குடியரசு தலைவர் செல்லும் விமானத்துக்கு அனுமதி வழங்க பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்தது. அதேபோல தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.