பெரணமல்லூர்: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் காவல் நிலையம் அருகே சூரியகுளம் உள்ளது. இக்குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இக்குளத்தின் அருகே சுகாதார மையம் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெரணமல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதன்காரணமாக இக்குளம் நிரம்பி வழிகிறது. இதனால், சுகாதார மையத்துக்கு வந்து செல்லும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் தங்கி இருக்கும் நோயாளிகளின் குழந்தைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் இக்குளத்தின் அருகே விளையாடுகின்றனர். எனவே சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இக்குளத்தை சுற்றி கம்பி வேலி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.