×

இந்தியாவின் பிரதமராக வீரசாவர்க்கர் இருந்திருந்தால் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருந்திருக்காது: உத்தவ் தாக்கரே பேச்சு

மும்பை: இந்தியாவின் பிரதமராக வீரசாவர்க்கர் இருந்திருந்தால் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருந்திருக்காது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. வீரசாவர்க்கர் கடந்த காலத்தின் மறக்கப்பட்ட எதிரொலிகள் என்ற தலைப்பிலான அந்த புத்தகத்தை சம்பத் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்றுள்ளார்.

உத்தவ் தாக்கரே கூறுகையில், வீரசாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் இந்த நாட்டுக்கு செய்த சேவைகளை நாங்கள் மறக்கவில்லை, மறுக்கவில்லை. ஜவஹர்லால் நேரு துணிச்சல் மிக்கவர் அவரை வீரர் என்று அழைத்திருக்கிறேன். அவர் 14 நிமிடங்கள் சிறையில் இருந்திருந்திருந்தால் வீரசாவர்க்கர் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வீரசாவர்க்கர் குறித்த இந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும். அவருக்கு புத்தகத்தின் ஒருநகலை அனுப்பி வைக்க வேண்டும்.

வீரசாவர்க்கர் மட்டும் நாட்டின் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் என்ற ஒருநாடே இருந்திருக்காது. இந்த புத்தகத்தை ஒவ்வொரு கல்லூரி, பள்ளிகளில் இருக்கும் நூலகங்களில் வாங்கி வைத்து மாணவர்கள் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு எம்.பி.யும், எம்எல்ஏவும் இந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இந்த புத்தகத்தை எழுதிய விக்ரம் சம்பத் கூறுகையில், வீரசாவர்க்கர் குறித்து கேட்டவிஷயங்கள், படித்தவை, எழுதப்பட்டவை ஆகியவற்றின் அடிப்படையில் இப்புத்தகத்தை எழுதினேன். அந்தமான் சிறைச்சாலையில் அவர் பட்ட துன்பகள் இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அரசியல் அரங்கில் வீரசாவர்க்கர் பெயர் தீவிரமாக பேசப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வீரசாவர்க்கர் மீது அவதூறுகள் பேசியுள்ளார். ஆனால் பிரதமர் மோடி வீரசாவர்க்கர் அடைக்கப்பட்ட சிறைக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். இந்த புத்தகத்தில் இரு பிரிவுகள் இருக்கின்றன. ஒரு பிரிவு கடந்த 1883 முதல் 1924-ம் ஆண்டுவரை வீரசாவர்க்கரின் பிறப்பு, போராட்டகளத்தில் வீரராக உருவானது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பிரிவு அவர் சிறையில் இருந்த காலத்தை குறிக்கிறது என விக்ரம் சம்பத் கூறியுள்ளார்.

Tags : Veerasavarkar ,Pakistan ,Uthav Thackeray ,India ,country , India, Prime Minister, Weeravakar, Pakistan, One Nation
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி