சேலம்: ஆவின் நிறுவனம் ரூ.300 கோடி நஷ்டத்தில் சிக்கியுள்ளதாக பரபரப்பு புகார் கூறியுள்ள தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2016-2017-ம் நிதியாண்டு ஆவின் நிறுவனம் ரூ.139 கோடி நிகர லாபம் ஈட்டியதாக தெரிவித்துள்ள பால் முகவர்கள் சங்கம் அடுத்தடுத்த நிதியாண்டுகளில் சரிவை சந்தித்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளது.
லஞ்சம் ஊழல் உள்ளிட்டவையே ஆவின் நஷ்டத்திற்கு காரணம் என்று அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஆவின் நிர்வாக இயக்குநர், பால்வளத்துறை அமைச்சர், மற்றும் செயலாளரை பதவிநீக்க வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஆவின் மொத்த விநியோகஸ்தர்களிடம் அதிகாரிகள் லிட்டருக்கு 50 பைசா வரை மிரட்டி லஞ்சம் வாங்குவதாக பால் முகவர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்களை நியமிக்கும் அரசின் திட்டம் ஆவினை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி என்று பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.