கோலாலம்பூர்: ‘‘மலேசியாவில் அடைக்கலம் புகுந்த இந்திய இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கை திருப்பி அனுப்பும்படி பிரதமர் மோடி கேட்கவில்லை,’’ என அந்நாட்டு பிரதமர் மஹாதீர் முகமது தெரிவித்துள்ளார். மலேசிய பிரதமர் மஹாதீர் முகமது நேற்று அளித்த பேட்டி: இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவில் நடந்த பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினேன். அப்போது, அவர் ஜாகீர் நாயக்கை இந்தியாவிற்கு நாடு கடத்துவது குறித்து எதுவும் பேசவில்லை.
பல நாடுகள் ஜாகீர் நாயக்கை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. மலேசியாவில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் சீனர்களுக்கு எதிராக இனரீதியிலான கருத்தை அவர் கூறியுள்ளார். அவரை எங்கு அனுப்புவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். அவர் இந்த நாட்டின் குடிமகன் கிடையாது. கடந்த ஆட்சியில் அவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றார். ஆனால், மஹாதீரின் பேச்சுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அவரிடம் கோரிக்கை விடுத்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.