×

இப்போது பழைய முறையே தொடரும் தமிழகத்தில் 5, 8ம் வகுப்புக்கு 3 ஆண்டுக்கு பிறகே பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தர்மபுரி: தமிழகத்தில் 5, 8ம் வகுப்புக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பொதுத்தேர்வு 3 ஆண்டுக்கு பிறகே நடக்கும், தற்போது பழைய முறையே தொடரும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் தெரிவித்தார். தர்மபுரி தனியார் பள்ளியில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு  தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் வெளிநாடு சென்றபோது, அங்குள்ள கல்வி முறையை ஆய்வு செய்து, முதல்வரிடம் கருத்து  பரிமாறப்பட்டுள்ளது. முதல்வர்  ஆய்வுக்கு பின்னர் துறை ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும். வெளிநாடுகளில்  உள்கட்டமைப்புகள் இருப்பது போல் நம் தமிழகத்திலும் ஏற்படுத்த நடவடிக்கை  எடுக்கப்படும். மலேசியாவில் உள்ளவர்கள் மூலம் 20 லட்சம் ‘டேப்லெட்’கள் தமிழக  மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.  எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள்  வழங்கப்பட்டு விட்டன.  

மேல்நிலைப்பள்ளி பாடத்திட்டத்தில் 6 பாடங்களை, 5 பாடங்களாக மாற்றுவதற்கான கோப்புகள்  முதல்வருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அவரது ஒப்புதல் பெற்ற பின்னர், உரிய  நடவடிக்கை எடுக்கப்படும். சிபிஎஸ்இ.யில் 5 பாடத்திட்டங்கள்தான் உள்ளன.  நடப்பாண்டில் 6 பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருக்கும். ஆப்சன் என்ற  முறையில் மாணவர்கள் விரும்பினால் 5 பாடத்திட்டங்களை படிக்கலாம். தமிழகத்தில் 5 மற்றும் 8ம்  வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற நடைமுறை மத்திய அரசின் திட்டத்தில்  செயல்படுத்தப்பட உள்ளது. ஆனால்  பழைய முறையே 3 ஆண்டுகளுக்கு தொடரும்.  மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாட்டுக்காக  தமிழகத்திற்கு 3 ஆண்டுகளுக்கு விலக்கு கேட்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Senkottaiyan ,elections ,election , Tamil Nadu will continue, old age 5, 8, 3 years , general election.
× RELATED பதிவு சான்றிதழ் இல்லாத வாகனங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதி கிடையாது