நெல்லை: சென்னை, பூந்தமல்லி பலராமன் நகரைச் சேர்ந்த ரகு மகள் அஸ்வதா (19). இன்ஜினியரிங் கல்லூரி2ம் ஆண்டு மாணவி. தென்காசி இடைகால், இந்திரா காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சின்னராஜ் (24). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இந்த காதல் ஜோடி நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு நேற்று தஞ்சம் அடைந்தது. காவல்துறை அதிகாரிகளிடம் அஸ்வதா அளித்த மனு: சென்னை பூந்தமல்லியில் என் வீட்டிற்கு எதிர் வீட்டில் தங்கி, அங்குள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றிய சின்னராஜூக்கும், எனக்கும் காதல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இதுதெரியவே எனது பெற்றோர் எனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இதனால் சின்னராஜூம், நானும் சென்னையை விட்டு கிளம்பி கடந்த 15ம் தேதி தென்காசி பெருமாள் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். நான் சட்டப்படி மேஜராகியுள்ளேன். எனவே எனது வாழ்க்கையை நானே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். இந்நிலையில் என் தந்தையும், பூந்தமல்லி போலீசாரும் என்னைத் தொடர்பு கொண்டு உடனடியாக ஊருக்கு புறப்பட்டு வரும்படி அழைக்கின்றனர். அங்கு எங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.