×

இந்தி ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தம்மை அர்ப்பணிப்போம்; வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்: திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு

சென்னை: இந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்துக்கு வருமாறு திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக மகிழ்ச்சிக் கடலில் நீந்தி மனம் மயங்கிடும் இயக்கமல்ல; மக்களின் நலன் காக்கும் அறப்போர்க் களத்தில் எப்போதும் எதிர்நீச்சல் போட்டே வளர்ந்த இயக்கம். இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த நம்மை அர்ப்பணிப்போம். நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல; எந்த மொழியும் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்த விடமாட்டோம்.

தமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான்; யாருக்கும் தாழவும் மாட்டான் என்பதை உணர்த்தும் வகையில் அணிவகுப்போம். இந்தி ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தம்மை அர்ப்பணிப்போம்; வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். அய்யா பெரியார்- பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் வழியில் அனைத்துத் தமிழைக் காத்திடுவோம். அன்னைத் தமிழை காப்பது தான் நமக்கு பெரும் மகிழ்ச்சி; அதற்கான போராட்டமே நமக்கு திருவிழா.

இந்தியாவின் அடையாளமாக இந்தி தான் இருக்க வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் பேச்சு நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்துவிடும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய அடையாளத்தை தகர்த்து நாட்டின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கக்கூடியது அமித்ஷாவின் பேச்சு. இந்தி என்ற ஆதிக்க அணுகுண்டு கொண்டு ஒன்றுபட்ட இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுத்திவிடாதீர்கள் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Tags : DMK ,Stalin , Hindi, Tamil, DMK, Stalin, Call
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...