×

கர்தார்பூர் சிறப்பு பாதை வரும் நவம்பர் 9-ம் தேதி திறக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: கர்தார்பூர் சிறப்பு பாதை நவம்பர் 9-ம் தேதி திறக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் தேவின் சமாதியான கர்தார்பூர் சாஹிப் பாகிஸ்தானில் சர்வதேச எல்லையை ஒட்டி ராவி நதிக்கரையில் அமைந்து உள்ளது. இந்த சமாதிக்கு செல்வதை சீக்கியர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். இங்கு சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதே போல பாகிஸ்தானில் இருந்து கர்தார்பூர் வரையிலான வழித்தடத்தை அமைக்க  சம்மதித்த பாகிஸ்தான், அந்த பணிகளை தொடர்ந்து வருகிறது.

இதனிடையே புல்வாமா தாக்குதலை தொடர்ந்தும், பின்னர் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாலும் இந்தியா - பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கர்தார்பூர் பாதை திட்டம் கேள்விக்குறியானது. இதை நிறைவேற்ற பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்காது என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், இந்த மோதலுக்கு இடையிலும் இந்திய - பாகிஸ்தான் அதிகாரிகள், சில தினங்களுக்கு முன் கர்தார்பூர் திட்டம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கர்தார்பூர் சாஹிப்புக்கு சீக்கியர்கள் விசா இல்லாமல் செல்லவும் இரு நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் தரப்பில் இந்த திட்டத்தின் இயக்குனர் அதிப் மஜீத் கூறுகையில்; கர்தாப்பூர் சாலை அமைப்பு பணிகள் 86 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. மீதியுள்ள பணிகள் முடிந்து வரும் நவம்பர் 9ல் இந்திய சீக்கியர்களுக்காக இந்த பாதை திறக்கப்படும். அதன் பின் தினமும் இந்தியாவிலிருந்து 5000 சீக்கியர்கள் இந்த பாதையில் விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த எண்ணிக்கை பின் 10 ஆயிரமாக உயர்த்தப்படும் என அவர் கூறினார்.


Tags : Pakistan ,announcement , Gardarpur Special Road, Pakistan
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி