புதுடெல்லி: சட்டப்பேரவை தேர்தலின் போது பிரசாரத்தை தடுத்த நபரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், 6 மாத சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம் தத்துவுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி சாதர் பஜார் தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்தத். இவர், கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரசாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி குலாபி பாக்கில் வசித்து வரும் சஞ்சீவ் ராணா என்பவர் வீட்டுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று பேஸ் பால் மட்டையால் தாக்கினார்.இதில் ராணா பலத்த காயமடைந்தார்.இதையடுத்து, ராணா போலீசில் புகார் அளித்ததன்பேரில், சோம் தத்துவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கூடுதல் பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நீதிபதி சமர் விஷால் அமர்வு இந்த வழக்கில், கடந்த ஜூலை 4ம் தேதியன்று தீர்ப்பளித்தார். அதில், சோம் தத்துவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாக வறி, 6 மாத சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.கீழ் நீதின்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சோம்தத் செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், கீழ் நீதிமன்றம் சோம்தத்துவுக்கு எதிரான வழக்கில் தவறு இழைத்து விட்டதாக வாதிட்டார். எனினும், இதனை ஏற்க மறுத்த சிறப்பு நீதிபதி, அஜய் குமார் கவுர், கீழ் நீதிமன்றம் விதித்த உத்தரவில் தலையிடுவதற்கான தேவை, மற்றும் அவசியம் ஏற்படவில்லை. முறையாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, சோம்தத்துவை கைது செய்த போலீசார், ரோகினி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு வழங்கிய தீர்ப்பு மற்றும் தண்டனைக்கு எதிராக சோம்தத், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ் கைட், இந்த விவகாரத்தில் மாநில அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளி வைத்ததோடு, சோம்தத்துவுக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.