புதுடெல்லி: ஆம் ஆத்மி அரசின் டெங்கு காய்ச்சலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையில் பங்கேற்க வருமாறு மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு முதல்வர் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர் நடவடிக்கையை முதல்வர் கெஜ்ரிவால் ஏற்கெனவே தொடங்கியுள்ளார். முதல்வர் கெஜ்ரிவால் அவரது வீட்டில் கடந்த இருவாரங்களாக இதை செய்து வருகிறார். இந்நிலையில், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில், என்னுடைய 10 வாரம் 10 மணிக்கு 10 நிமிடங்கள் என்ற திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்க உத்தரவிட வேண்டும். இந்த டெங்குவுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையில் நீங்களும், அனைத்து மத்திய அமைச்சர்களும் பங்கேற்க வேண்டும். நீங்கள் கலந்து கொண்டால் அது மற்றவர்களுக்கு உற்சாகத்தை, ஊக்கத்தை ஏற்படுத்தும். டெல்லி அரசு ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் இதில் பங்கேற்று வருகின்றனர்.
இதே போன்று மத்திய அரசு ஊழியர்களும் பங்கேற்க வேண்டும். டெல்லியில் மத்திய அரசு ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். ஆம் ஆத்மி அரசின் காற்று மாசுவுக்கு எதிரான ஒற்றைப்படை, இரட்டை இலக்க வாகன பதிவெண் திட்டத்து கிடைத்த வெற்றியை போன்று கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கும் மத்திய அரசு ஆதரவு தர வேண்டும் ’’ என கூறியுள்ளார். கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷ் வர்தன், அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்தும் விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசு எதையும் செய்யவில்லை. ஏழை மக்களுக்கு இழைக்கும் துரோகம் என குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், கெஜ்ரிவால் அவருக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.