* ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா?
* மக்கள் வரிப்பணம் வீண்
புழல்: மழைநீர் கால்வாய் தரமில்லாமல் கட்டப்பட்டதால் கட்டிமுடித்த ஏழே மாதத்தில் சேதமடைந்துள்ளது. இதனால் கட்டிமுடித்த ஒப்பந்ததாரர்கள் மூலம் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 32வது வார்டு கடப்பா சாலை சந்திக்கும் அசோகர் தெருவில் மழைநீர் கால்வாய் உள்ளது. பாழடைந்த இந்த கால்வாயை சீரமைக்கக்கோரி மாதவரம் மண்டலத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் ரூ 3 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.
கடந்த ஏழு மாதத்திற்கு பின் முடிந்த இந்த மழைநீர் கால்வாய் நேற்று முன்தினம் மாலை பெய்த லேசான மழைக்கே சரிந்து விழுந்துள்ளது. கட்டி முடிக்கப்பட்டு ஏழு மாதத்தில் தரமில்லாத கால்வாய் காரை பெயர்ந்துவிட்டது. இந்த பணியை செய்த ஒப்பந்ததாரர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.