சென்னை: தமிழக அரசை கண்டித்து மின்வாரிய தலைமை அலுவலகத்தின் முன்பு, இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ெதாமுச அறிவித்துள்ளது. இதுகுறித்து தொமுச பொதுச்செயலாளர் ரத்தினசபாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசையும், மின்வாரியத்தையும் கண்டித்து தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் இன்று மின்வாரிய தலைமை அலுவலக நுழைவாயில் முன்பு மாலை 5.15 மணிக்கு நடக்கிறது.
இதில், 40,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், கேங்மேன் பதவியை ரத்து செய்ய வேண்டும், 15,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், 1.12.2019 ஊதிய உயர்வு பேச்சு வார்த்தைக்கு குழு உடனே அமைத்திட வேண்டும், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களை காலதாமதமின்றி பொது வருங்கால வைப்பு நிதி கடன் மற்றும் ஈட்டிய விடுப்பு காசாக்குதல் மற்றும் இதர படிகள் உடனே வழங்கிட வேண்டும், தொழிற்சங்கங்களுடன் செய்து கொண்ட வேலை பளு ஒப்பந்தப்படி புதிய பதவிகளை உடனே அனுமதித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.