×

இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ  தலைவருமான அமித்ஷா நேற்று முன்தினம் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி  இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி,  சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்,’ என கூறியுள்ளார்.

இந்தி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய அமித்ஷா, ‘‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும். அடுத்தாண்டு நாட்டின் பல பகுதிகளில் இந்தி தின நிகழ்ச்சிகளை நாம் நடத்துவோம்.  ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் தங்கள் தாய்மொழியில் பேச வேண்டும். உடன் பணியாற்றுபவர்களிடமும் தாய்மொழியில் பேச வேண்டும். நான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது, முதல் 10 நாட்களில் ஒரு கோப்பு கூட  இந்தியில் வரவில்லை. தற்போது 60 சதவீத கோப்புகள் இந்தியில் வருகின்றன,’’ என்றார்.

அமித்ஷாவின் இந்த கருத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராய் விஜயன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி உட்பட பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக்  கண்டித்து செப்டம்பர் 20-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : protests ,DMK , DMK protests on September 20 on behalf of the DMK
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...