பெங்களூரு: ‘‘ஒரே நாடு, ஒரே வரி என்பது ஓகே. ஆனால், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பதை ஏற்க முடியாது,’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.கர்நாடக வர்த்தக சபையில் நேற்று நடந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டார். விஸ்வேஸ்ரய்யாவின் சிறப்புகளையும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் அவருக்கு இடையே இருந்த உறவுகள் குறித்தும்
விளக்கமாக கூறிய ஜெய்ராம் ரமேஷ், விழாவில் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, ஒரே நாடு; ஒரே வரி என்ற திட்டத்தை அமல்படுத்தினார். நாட்டின் வளர்ச்சிக்கு இது தேவை என்பதால் அதை வரவேற்றேன்.
ஒரே நேரத்தில் என்னால் பல மொழியில் பேச முடியாது. அதே போல்தான், பலரின் நிலைமை. அப்படி இருக்கும்போது இந்தியா முழுவதும் ஒரே மொழி என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரே மொழி, ஒரே கலாசாரம், பண்பாடு ஒன்றாக எப்படி இருக்க முடியும்? இவ்வாறு அவர் பேசினார்.கவர்னரிடம் மன்னிப்பு: மோடியை விமர்சித்து பேசியபோது அந்த மேடையில் கவர்னர் விஆர் வாலாவும் இருந்தார். அவரை பார்த்த ஜெய்ராம் ரமேஷ், ‘‘தாங்கள் இருக்கும்போது இவ்வாறு பேசுவதற்கு என்னை மன்னிக்க வேண்டும்,’’ என கேட்டுக் கொண்டார். அதற்கு கவர்னர் வஜூபாய் வாலாவும் நட்போடு சிரித்து, பேச்சை தொடர அனுமதி அளித்தார்.