லண்டன்: இங்கிலாந்து அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன் கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸி. அணி முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 294 ரன் குவிக்க, அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 225 ரன்னுக்கு சுருண்டது. இதைத் தொடர்ந்து, 69 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன் எடுத்திருந்தது. டென்லி 94, ஸ்டோக்ஸ் 67, பட்லர் 47 ரன் விளாசினர். ஆர்ச்சர் 3, லீச் 5 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர்.
ஆர்ச்சர் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, லீச் 9 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இங்கிலாந்து 329 ரன்னுக்கு 2வது இன்னிங்சை இழந்தது (95.3 ஓவர்). பிராடு 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் லயன் 4, கம்மின்ஸ், சிடில், மார்ஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 399 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி 148 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. ஹாரிஸ் 9, வார்னர் 11, லாபஸ்ஷேன் 14, ஸ்மித் 23, மிட்செல் மார்ஷ் 24 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த நிலையில், மேத்யூ வேடு - கேப்டன் பெய்ன் ஜோடி 6வது விக்கெட்டுக்கு அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடியது.