×

முத்துப்பேட்டை மளிகை கடையில் நூதனம்: செல்பி எடுத்து ரூ30,000 திருடிய வெளிநாட்டு தம்பதி

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டையில் மளிகை கடையில் செல்பி எடுத்து கவனத்தை திசை திருப்பி ரூ30 ஆயிரத்தை அபேஸ் செய்த வெளிநாட்டு தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் மொத்த மளிகை கடை வைத்திருப்பவர் முகமது சபியுல்லா (32). இவரது கடைக்கு நேற்று மாலை சுமார் 4 மணியளவில் டிப்டாப் உடை அணிந்த வெளிநாட்டு தம்பதியினர் வந்தனர். கோட் சூட் அணிந்த நபர் உரிமையாளரிடம் பிளேடு வாங்கியுள்ளார். பின்னர் தான் வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வந்துள்ளதாகவும், எனது தந்தை வெளிநாட்டு பணம் வைத்து இருப்பதாகவும் கூறி அறிமுகம் செய்துகொண்டார்.

பின்னர், தனது பர்சில் உள்ள வெளிநாட்டு பணத்தை காட்டி எங்கே இந்த பணத்தை மாற்றலாம் என்று கேட்டார். பின்னர் இந்தியா பணத்தில் சிஎல் என்று போட்ட சீரியல் நம்பர்உள்ள பணம் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் தாருங்கள் என்று கேட்டுள்ளார். அதன்படி அவரும் கொடுத்துள்ளார். முதலில் 500 ரூபாய் கட்டை பார்த்துவிட்டு கொடுத்தவர், பின்னர் 2 ஆயிரம் ரூபாய் கட்டை வாங்கி பார்த்துவிட்டு கொடுத்துள்ளார். இதற்கிடையில் அவருடன் சிகப்பு கலர் சுடிதார் அணிந்து டிப்டாப்புடன் வந்த அந்த வெளிநாட்டு பெண் அங்கு நின்றவர்களிடமும், கடையில் வேலை பார்த்தவர்களிடமும் தொடர்ச்சியாக பேச்சு கொடுத்து செல்போனில் செல்பி எடுத்து அனைவரது கவனத்தையும் திசை திருப்பி உள்ளார்.

இதனை பயன்படுத்தி கொண்ட அந்த டிப்டாப் ஆசாமி தான் பார்த்த பணக்கட்டுகளில் இருந்து சுமார் ₹30 ஆயிரம் வரை எடுத்துவிட்டு அங்கிருந்து இருவரும் சற்று தூரத்தில் காரில் ஏறி சென்றுவிட்டனர். இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர், அந்த தம்பதி சென்றவுடன் பணக்கட்டுகளை சபியுல்லா சோதித்து பார்த்தபோது ₹30 ஆயிரம் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இது குறித்து முகமது சபியுல்லா முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார்செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி தம்பதியை தேடி வருகிறார்கள்.

Tags : Muthupettai ,grocery store , Muthupettai, Grocery Store
× RELATED திருவாரூர் முத்துப்பேட்டை இலவச...