×

திருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா இன்று மாலை நடக்கிறது: மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்

சென்னை: திமுக முப்பெரும் விழா திருவண்ணாமலையில் இன்று மாலை நடக்கிறது. விழாவில் விருதுகளை மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். திமுக முப்பெரும் விழா திருவண்ணாமலை நகரம், ‘கலைஞர் திடலில்’ இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவிற்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை வகிக்கிறார். மாவட்ட செயலாளர் எ.வ.வேலு வரவேற்புரையாற்றுகிறார். திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருதுகள், பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில் பெரியார் விருது-வேணுகோபால், அண்ணா விருது- சி.நந்தகோபால், கலைஞர் விருது- ஏ.கே.ஜெகதீசன், பாவேந்தர் விருது-சித்திரமுகி சத்தியவாணிமுத்து, பேராசிரியர் விருது-தஞ்சை இறைவனுக்கும் வழங்கப்படுகிறது.மேலும் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மற்றும் சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கான நன்சான்று, பணமுடிப்பு, பதக்கம் ஆகியவை முரசொலி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கட்சி பணியில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கும்,

ஊராட்சி செயலாளர் தலா ஒருவருக்கும் கழக விருது வழங்குதல் மற்றும் சிறப்பு சாதனை புரிந்த மூவருக்கும் இளம் சாதனையாளர் விருது மற்றும் சான்றிதழ்-பணமுடிப்பு முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படுகிறது. முன்னதாக காலை 10 மணிக்கு ‘திராவிடத்தின் திருவிளக்கு’ என்ற தலைப்பில் கவியரங்கமும், காலை 11.30 மணிக்கு தமிழினம்-சுயமரியாதை- திராவிடம் மேலும் தழைக்க இன்றைய தேவை என்ற தலைப்பில் பட்டிமன்றமும், மாலை 3 மணிக்கு உலகின் ‘விடியல் உதயசூரியன்’ என்ற தலைப்பில் திரை இசையரங்கமும் நடக்கிறது.

Tags : DMK ,ceremony ,Thiruvannamalai , Thiruvannamalai, DMK big ceremony, this evening, MK Stalin, award
× RELATED திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு