×

பெயின்டர் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது

புழல்: கொளத்தூர் தெற்கு மாட வீதியை சேர்ந்த பெயின்டர் பாஸ்கர் (42) என்பவரை, கடந்த 12ம் தேதி இரவு 3 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஸ்கர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து, ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், கொளத்தூர் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அஜீத் (23), கொளத்தூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த லாசர் (21) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர், பாஸ்கரை கொலை செய்தது தெரிந்தது.

மேலும் விசாரணையில், கொளத்தூர் செல்லியம்மன் நகரை சேர்ந்த வீரமணி என்பவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன் பாஸ்கரின் மனைவியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாஸ்கர் வீரமணியை இரும்பு கம்பியால் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த வீரமணி சில மாதங்களில் இறந்தார். இதற்கு பழிக்கு பழியாக, வீரமணியின் தம்பி அஜித் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாஸ்கரை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இவர்கள் மூவரையும் கைது செய்தனர். இதில், அஜித் லாசர் ஆகிய இருவரையும் புழல் சிறையிலும், 16 வயது சிறுவனை கீழ்ப்பாக்கம் சீர்திருத்த பள்ளியிலும் சேர்த்தனர்.

Tags : murder ,Painter , Painter killed, boy, 3 others arrested
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...