சோழவந்தான்: சோழவந்தான் அருகே பள்ளி பகுதியிலுள்ள நிழற்குடையை ‘குடிமகன்கள்’ உடைத்து சேதப்படுத்தியதால் வெயில் மற்றும் மழையில் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். சோழவந்தான் அருகே மேலக்காலில் நாகமலை கனவாய் அருகே அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி அருகே சோழவந்தான்-திருமங்கலம் சாலையில் சில வருடங்களுக்கு முன் ஊராட்சி சார்பில் சிமென்ட் சிலாப்பிலான இருக்கைகளுடன் கூடிய நிழற்குடை கட்டப்பட்டது.
இது சோழவந்தான், செக்கானூரணி ஆகிய இரு பகுதியிலிருந்து பேருந்தில் வந்து செல்லும் மாணவ,மாணவியர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. நாளடைவில் ‘குடிமகன்கள்’ இதை திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். குடித்து விட்டு பாட்டில்களை உடைப்பதுடன், போதை தலைக்கேறியதும் அங்குள்ள சிமென்ட் சிலாப்பிலான இருக்கைகளையும் உடைத்தெறிந்து விட்டனர். இருக்கைகள் இல்லாததாலும், உடைந்த பாட்டில்கள் மற்றும் இயற்கை உபாதை அசுத்தங்களாலும் நிழற்குடையினை மாணவர்கள் பயன்படுத்த முடியாமல் வெயில், மழையில் வெளியில் நின்று அவதி அடைந்து வருகின்றனர்.
இதன் அருகே உள்ள தனியார் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களும் இந்நிழற்குடை பயனற்று உள்ளதால் சிரமத்தில் உள்ளனர். எனவே புதிய இருக்கைகளுடன் இந்நிழற்குடையை மராமத்து செய்து ஊராட்சி நிர்வாகத்தினர் புதுப்பிக்கவும், அடிக்கடி ஆய்வு செய்து ‘குடிமகன்களின்’ அட்டகாசத்தை காவல்துறையினர் கட்டுப்படுத்தவும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.