சென்னை: சென்னை அருகே அம்பத்தூரில் சிறு, குறு தொழில்கள் முடங்கியிருப்பதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக பெரிய நிறுவனங்கள் உற்பத்தியை பாதியாக குறைத்துள்ளன. இதன் காரணமாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அசோக் லேலண்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் 3,000 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் 3 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோவையிலும் சிறு, குறு தொழில்கள் முடக்கம்
நாட்டில் நிலவி வரும் பொருளாதார தேக்கநிலை காரணமாக கோவையில் இயங்கி வரும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வாகன உதிரி பாகங்கள், மற்றும் மோட்டார் பம்ப் செட்டுகள், கிரைண்டர்கள், தங்க நகைகள் ஆகியவற்றை தயாரிக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கோவையில் அதிகம் செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஜி.எஸ்.டி.யால் பாதி வருவாயை இழந்த நிலையில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.