சென்னை: கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் அம்பேத்கர் சட்ட கல்லூரி உள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 5 ஆண்டு சட்டப்படிப்பில் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரி வளாகத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு என தனித்தனியே விடுதி உள்ளது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி இரவு விடுதியில் தங்கி இருந்த 2ம் ஆண்டு மாணவர்கள் அஜீத் (19), வசந்த் (19), பூபதி (19) ஆகியோரை அழைத்த 5ம் ஆண்டு மாணவர்கள் ரேகிங் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 2ம் ஆண்டு மாணவர்கள் 3 பேரை சீனியர் மாணவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் கவுரி விசாரணை நடத்தி, 5ம் ஆண்டு மாணவர்கள் மாடசாமி (22), பாலகிருஷ்ணன் (22), சூரிய பிரகாஷ் (22), இளவரசன் (22), விஜய் (22) ஆகிய 5 பேரை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.