×

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு அமலாக்கத் துறையிடம் சரணடையும் ப.சிதம்பரத்தின் மனு அதிரடி தள்ளுபடி : 19ம் தேதி வரை திகாரில் சிறை

புதுடெல்லி:ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேட்டு வழக்கில் அமலாக்கத் துறையிடம் தாமாக சரணடைந்து விளக்கமளிக்க தயாராக உள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நீதிமன்ற காவல் பெற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், அமலாக்கத் துறையிடம் சரணடைய விரும்புவதாக தாமாக முன்வந்து கடந்த 5ம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். இது, டெல்லி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்தில், “ப.சிதம்பரத்தை கைது செய்ய கடந்த மாதம் 20ம் தேதி அவரது வீட்டுக்கு சென்று அமலாக்கத் துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், தற்போது அவரது சிறை தண்டனையை நீட்டிக்க விரும்பும் விதமாக ப.சிதம்பரத்தை காவலில் எடுக்க விரும்பவில்லை என தெரிவிக்கின்றனர். இது அவரை வேதனையடைய செய்யும் செயலாகும்,’’ என்றார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதிடுகையில், “ குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை காவலில் எடுத்து விசாரிப்பது என்பது விசாரணை அமைப்பின் முடிவை சார்ந்த ஒன்றாகும். அதனால், இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் தாமாக முன்வந்து அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறுவதை கண்டிப்பாக ஏற்க முடியாது,’’ என வாதிட்டார்.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை செப்டம்பர் 13ம் தேதி பிற்பகல் 2மணிக்கு வழங்குவதாக நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், ‘ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முன்னிலையில் தாமாக முன்வந்து ஆஜராக விருப்பம் உள்ளதாக ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்க முடியாது. அதில் முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை. இதில் எப்போது அமலாக்கத்துறை உங்களை விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கிறதோ அப்போது நீங்கள் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்,’’ என உத்தரவிட்டு, சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்தார். இதனால், வரும் 19ம் தேதி வரை கண்டிப்பாக திகார் சிறையில் ப.சிதம்பரம் இருந்தாக வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது.

Tags : Chidambaram ,INX Media Abuse Case Enforcement Department , PC Chidambaram's Petition , Surrender, INX Media Abuse Case Enforcement Department
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...