×

நீட் தேர்வால் மருத்துவர் கனவு தகர்ந்தது: அரியலூர் மாணவி அனிதா தற்கொலை விசாரணையை விலக்கிக்கொள்ள பெற்றோர் மனு

புதுக்கோட்டை: அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பான விசாரணையை விலக்கிக் கொள்ள வேண்டும் என அவரது பெற்றோர் தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திடம் மனு செய்துள்ளனர். என்ன காரணத்தினால் இவ்வாறு மனு கொடுத்தனர் என ஆணையம் பரிசீலித்து கொண்டு இருக்கிறது என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணை தலைவர் முருகன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கலெக்டர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எஸ்பி செல்வராஜ், டிஆர்ஓ சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்திய தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணை தலைவர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வில் வெற்றி பெறாததால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பான விசாரணையை ஆணையம் நடத்தி வருகிறது. இந்த விசாரணையை விலக்கிக் கொள்ள வேண்டும் என அவரது பெற்றோர் தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திடம் மனு செய்துள்ளனர்.

என்ன காரணத்தினால் அவர்கள் விசாரணையை விலக்கி கொள்ள வேண்டும் என மனு கொடுத்துள்ளனர் என்று தெரியாது. அதுகுறித்து ஆணையம் பரிசீலித்து கொண்டு இருக்கிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளில் பதிவாகும் வழக்குகள் விசாரணை மற்றும் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.சி., எஸ்.டி பிரிவில் வழக்கு தொடர்ந்தால் உடனே சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் சார்ஜ் ஷீட் போட வேண்டும். அவ்வாறு போடாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Anita ,Needle exam doctor ,Arielur , NEET EXAM
× RELATED மீனவர் பிரச்னை குறித்து முக்கிய...