சென்னை: சென்னை ஆலந்தூரில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்றது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பரங்கிமலை பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்த இருவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 48 போதை மாத்திரைகள், 8 கஞ்சா பொட்டலங்கள் ரூ.25,000 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பரங்கிமலை, ஆலந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களை மர்ம நபர்கள் விற்பனை செய்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதனடிப்படையில் பரங்கிமலை நசரத்புரம் பகுதியில் நேற்று இரவு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரித்த போது, அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் என்று சொல்லப்படும் போதை பொருள் மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரங்கிமலை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த காமேஷ் மற்றும் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த சீனாத் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஆந்திராவில் இருந்து போதை மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி அதனை சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்துள்ளனர். மேலும் ஒரு மாத்திரையின் விலை ரூ.300-க்கு விற்று வந்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 5 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் பின்னணியில் உள்ள கும்பல் குறித்தும் தற்போது தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில் நேற்று இதேபோல வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.