×

வங்கிகள் இணைப்பை எதிர்த்து நாடு முழுவதும் வங்கி ஊழியர் சங்கங்கள் 2 நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டம்

புதுடெல்லி: வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் 27ம் தேதி வரை வங்கி ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நவம்பர் மாதம் 2வது வாரத்தில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளுடன் சில பொதுத்துறை வங்கிகள் ஏற்கெனவே இணைக்கப்பட்டன. இந்நிலையில் 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 பெரிய வங்கிகளாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொதுத்துறை வங்கிகளை நிதி அடிப்படையில் வலுப்படுத்தும் நோக்கில் 10 வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்படுகிறது.

இதற்கு வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன்படி செப்டம்பர் மாதம் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் தீபல் குமார் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ், அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், தேசிய வங்கி அதிகாரிகள் அமைப்பு ஆகிய சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்து உள்ளன.  வாரத்தில் 5 நாட்கள் வேலை, பண பரிவர்த்தனை சேவை நேரத்தை குறைத்து வேலை நேரத்தை ஒழுங்குமுறை படுத்துதல், வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் இணைந்து, வரும் நவம்பர் 2வது வாரத்தில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளது.

Tags : Bank employee unions ,country protest , Banks, Strike, Struggle, National Banks, Merger
× RELATED எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்க...