நியூயார்க்: ஏடிபி ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில் செர்பிய வீரர் ஜோகோவிச் முதலிடம் பிடித்துள்ளார். 2ம் இடத்தில் நடால் நீடிக்கிறார்.ஏடிபி ஒற்றையர் டென்னிஸ் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச் உள்ளார். இரண்டாம் இடத்தில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் உள்ளார். யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் ஒற்றையரில் ரன்னர் கோப்பை வென்றதன் மூலம், ரஷ்யாவின் இளம் வீரர் டேனில் மெட்வடேவ் தரவரிசையில் 4ம் இடத்தை எட்டிப் பிடித்துள்ளார். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபன் போட்டி கடந்த வாரம் முடிவடைந்தது. ஆடவர் ஒற்றையர் பைனலில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவை 5 செட்களில் போராடி வீழ்த்தி, யுஎஸ் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார்.ஏடிபி தரவரிசையில் முதலாம் இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வரும் ஜோகோவிச்சுக்கும், இரண்டாம் இடத்தில் உள்ள நடாலுக்கும் இடையே இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி துவங்குவதற்கு முன்னர், 4,400 புள்ளிகள் வித்தியாசம் இருந்தது. யுஎஸ் ஓபன் துவங்குவதற்கு முன்னர் இருவருக்கும் இடையே 3,740 புள்ளிகள் வித்தியாசம் இருந்தது.
யுஎஸ் ஓபன் 4வது சுற்றில் முதல் 2 செட்களை வாவ்ரிங்காவிடம் இழந்த நிலையில் காயம் காரணமாக ஜோகோவிச் வெளியேறினார். பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜோகோவிச் வெளியேறியது, அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் தற்போது ஏடிபி தரவரிசையில் ஜோகோவிச் முதலிடத்திலேயே தொடர்ந்து நீடிக்கிறார். அவர் 9,865 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2ம் இடத்தில் உள்ள நடால் 9,225 புள்ளிகள் பெற்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையேயான வித்தியாசம் மிகவும் குறைந்துள்ளது.யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் ரன்னர் கோப்பையை கைப்பற்றிய ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ், ஒற்றையர் தரவரிசையில் 10 இடங்கள் வரை முன்னேறி, தற்போது 4ம் இடத்தை பிடித்துள்ளார்.