அகோலா: மகாராஷ்டிராவில் 21 லட்சம் ரூபாய் நோட்டுக்களை கொண்டு உருவாக்கப்பட்ட கரன்சி விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 10 நாட்களாக விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. 10வது நாளான நேற்று மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த மெகா விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊனமுற்ற கலைஞர் தில்லு தவ்ரி என்பவர், அகோலா நகரின் வீர பகத்சிங் கணேச உத்சவ் மண்டலில் கரன்சி நோட்டுக்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலையை காட்சிக்கு வைத்திருந்தார். இது முழுக்க முழுக்க ரூபாய் நோட்டுகளால் உருவாக்கப்பட்டது. ₹1, ₹10, ₹100, ₹200 ₹500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் 21 லட்சம் நோட்டுகளை பயன்படுத்தி 3 நாட்களில் இதை தவ்ரி உருவாக்கியுள்ளார். ஸ்டேப்ளர் பின்களை பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இந்த விநாயகரை உருவாக்கி இருக்கிறார். இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்த வண்ணம் உள்ளனர். இந்த கரன்சி விநாயகர்தான் விநாயகர் சதுர்த்தி விழாவின் பரப்பான செய்தியாகவும் பேசப்பட்டது.
ரூபாய் நோட்டுக்களால் ஆன சிலை என்பதால் இதற்கு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், ரூபாய் நோட்டுக்களால் உருவான இந்த சிலையில் உள்ள ரூபாய் நோட்டுக்களை கிழியாமல் அகற்றி மண்டல் நிர்வாகிகளிடம் பணத்தை ஒப்படைப்பேன் என தவ்ரி தெரிவித்தார். முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டில் கிரிக்கெட் பேட், பந்துகள் உள்ளிட்டவற்றை கொண்டு இவர் விநாயகர் சிலையை வடிவமை த்து இருந்தார். கடந்த ஆண்டு 1100 தேங்காய்களை கொண்டு விநாயகர் சிலையை செய்தார்.