மதுரை:நெல்லையை சேர்ந்த முத்துகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராணுவ அதிகாரி பதவிக்கு கடந்தாண்டு நடந்த உடற்தகுதி மற்றும் எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றேன். தேர்வு முடிவில் 22 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தனர். எனது பெயர் இடம் பெறவில்லை. போதுமான காலிப்பணியிடம் இல்லாததால் 22 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பான அறிவிப்பில், பதவி விபரம், காலியிடம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இது சட்டவிரோதம். எனவே ராணுவ அதிகாரி பணியிடம் நிரப்புவதற்கான அறிவிப்பை ரத்து செய்து, போதுமான விபரங்களுடன் முறையான அறிவிப்பு வெளியிட்டு தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, மனு குறித்து மத்திய பாதுகாப்புத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தார்.