சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம் செய்யும் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சிவகங்கையை சேர்ந்த சோனியாகாந்தி, ராமநாதபுரத்தை சேர்ந்த கலைவாணி உட்பட 12 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் தேர்வுக்கான அறிவிப்பாணையை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. அதற்கான தேர்வு ஜூன் மாதம் 9ம் தேதி நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. ஆனால், தேர்வு நடைமுறையை பின்பற்றியதில் வெளிப்படைத்தன்மை இல்லை.
தேர்வில் பல விதிமீறல்கள் நடந்துள்ளன. தேர்வானவர்கள் பட்டியலும் நியாயமான முறையில் வெளியிடப்படவில்லை. எனவே இந்த தேர்வை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு குறித்து மருத்துவ தேர்வு வாரியம் பதிலளிக்குமாறும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.