நாகர்கோவில்: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாவட்டத்தில் குளம், கால்வாய், ஆறு, ஓடைகள் போன்ற நீர்நிலை புறம் போக்குகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றிட அளவீடு செய்யப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தற்போது குறியீடு செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம், 1905 மற்றும் தமிழ்நாடு ஏரிகள், குளங்கள் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம், 2007 ஆகிய சட்டவிதிமுறைகளைப் பின்பற்றி ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மேற்குறிப்பிட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நீர்நிலைகளை பாதுகாக்க வழங்கிய அறிவுரைகளின்படியும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் மதுரை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு, தீர்ப்புகளின் அடிப்படையிலும், வழிகாட்டுதல்களின்படி நிபந்தனைக்குட்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
நீர்நிலைகள் அருகிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசுப்பணியாளர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், அரசின் உத்தரவு வரம்பிற்குள் தான் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை செய்கிறார்கள் என்பதை பொது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை மேற்கொள்ளும் அரசு அலுவலர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் வண்ணம் தனிப்பட்ட நபர்களோ, ஆக்கிரமிப்பு செய்தவர்களோ செயல்பட கூடாது. இந்த பணியை செய்யும் போது அரசு அதிகாரிகளையும், அலுவலர்களையும் தனிப்பட்டமுறையில் கொச்சைப்படுத்தியோ, விமர்சனம் செய்தோ, பணியினை தடுக்கும் விதமாக தடைகளை ஏற்படுத்தியோ, குறிப்பிட்ட அதிகாரிகளை, அலுவலர்களை சமூகவலை தளங்களில் இழிவுபடுத்தி செயல்படும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.