தஞ்சை : தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிக்காக மேற்கூரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தஞ்சை பழைய பஸ் நிலையம் ரூ.14.88 கோடியிலும், திருவையாறு பஸ் நிலையம் ரூ.13.85 கோடியிலும் புதிதாக கட்டப்படுகிறது. இதையடுத்து தஞ்சை பழைய பஸ் நிலையம் அதிநவீன முறையில் அமைக்கப்படுகிறது. இதற்காக கடந்த 8ம் தேதி காலை முதல் பழைய பேருந்து நிலையம் இரும்பு வேலியால் மூடப்பட்டது. இதற்காக கரந்தை போககுவரத்து கழக பணிமனை எதிரே ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பேருந்து நிலையத்தை நவீன முறையில் கட்டுவதற்காக அங்கு போடப்பட்டிருந்த மேற்கூரைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. ஆனால் மேற்கூரையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததால் அவர்களது உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் பணியி்ல் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில் அவர்கள் தவறி விழுந்தாலோ அல்லது மழையில் வழுக்கி கீழே விழுந்தாலோ அவர்களது உயிர் கேள்விக்குறியாகி விடும். எனவே தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் மேற்கூரையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பணி செய்ய உத்தரவிட வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.