மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து கொடுக்கும் மக்களுக்கு அந்நாட்டு அரசு இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. உலகளவில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக எளிதில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேகரமாகின்றன. இதனை உண்ணும் கடல்சார் உயிரினங்களும் கடும் பாதிப்புள்ளாகின்றன. கடந்த 2015ம் ஆண்டு கடல் சார்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அதிக பிளாஸ்டிக் வெளியேற்றும் நாடுகள் வரிசையில் பிலிப்பைன்சும் முன்னணி வகிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான முயற்சி மட்டுமல்லாது அதனை மறுசுயற்சி செய்யும் பணியிலும் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் அந்நாட்டு தலைநகர் மணிலா அருகிலிலுள்ள பேயனார்க் கிராமத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு திட்டம் ஒன்றை அரசு அறிமுகம் செய்துள்ளது. ஒரு கிலோ அரிசியை சுமார் 50 ரூபாய் கொடுத்து வாங்க சிரமப்படும் இந்த மக்கள் பயன்பெறும் விதமாக பிளாஸ்டிக் குப்பைகளுக்கு பதில் அரசு அரிசி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இரண்டு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அரசிடம் ஒப்படைத்தால் மக்களுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதனை வாங்கி அன்றாட பிழைப்பை நடத்த அந்த கிராம மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். வீட்டருகே தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆர்வமுடன் அப்பகுதி மக்கள் சேகரித்து வருகின்றனர். மக்களிடம் இருந்து சேகரிக்கும் இந்த குப்பைகளை அரசு தானாக மறுசுயற்சியும் செய்து கொள்கிறது.