×

விழுப்புரம் அருகே குப்பையில் வீசப்பட்ட காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகளை உண்ட 7 மாடுகள் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குப்பையில் வீசப்பட்ட காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகளை உண்ட 7 பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானுறை அடுத்த மொரட்டாண்டி முந்திரி காட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற 4 நான்கு பசுமாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செத்து விழுந்தது. இது குறித்து விபரம் தெரியாமல் அந்த பகுதி மக்கள் தவித்து இருந்த நிலையில், புதன் கிழமை முந்திரி காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற மேலும் 3 பசுமாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக செத்து விழுந்தது. மொத்தம் 7 மாடுகள் செத்து விழுந்துள்ளதால் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து உயிரிழந்த பசுவின் வயிற்றை பரிசோதித்த மருத்துவர்கள் இரைப்பையில் ஜீரணமாகாத நூடுல்ஸ் தேங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மாட்டிற்கு நூடுல்ஸ் கொடுத்தது யார் என்று விசாரித்த போது மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் மேய்ந்திருக்கும் என்று தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக முந்திரி காட்டு பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கு மூட்டை மூட்டையாக ஏப்ரல் மாதத்துடன் காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் சிதறிக்கிடந்தது. இதனை சாப்பிட்டதால் தான் மாடுகள் பலியாகி இருக்கக்கூடும் என்றும், காலாவதியான அந்த நூடுல்ஸில் என்னென்ன ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து மாடுகளுக்கு பாதிப்பை ஏற்பட்டிருக்கும் என்பது குறித்து இரைப்பையில் சேகரிக்கப்பட்ட நூடுல்ஸ் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர் தெரிவித்த நிலையில், இதே நூடுல்ஸை மனிதர்கள் பயன்படுத்தினாலும் அதனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதையடுத்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட எந்த ஒரு உணவு பொருளையும் வாங்கும் முன்பாக அதன் காலாவதி தேதியை சரிபார்த்து வாங்குவது ஒவ்வொரு நுகர்வோரின் முக்கிய கடமையாகும்.

அதாவது பாக்கெட்டில் அடைக்கப்படும் உணவு பொருட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதில் சேர்க்கப்படும் ரசாயண கலவைகள் நாளடைவில் மெல்லக் கொல்லும் விஷமாக மாறக்கூடியவை என்று கூறப்படுகிறது. அதனால் தான் குறிப்பிட்ட தேதிக்குள் அந்த உணவு பொருட்கள் விற்பனை ஆகவில்லை என்றால், அவற்றை குப்பையில் வீசியோ அல்லது தீயிட்டோ அழித்து விட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது. காலாவதியான உணவு பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு உடனடியாக வயிற்று பிரச்சனைகள் ஏற்படும் என்றும், அது மெல்ல மெல்ல இரைப்பையை செயல் இழக்க செய்து பெரிய அளவிலான உடல் நலக்குறைவில் கொண்டு வந்து விட்டு விடும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள், மருந்து மற்றும் உணவு பொருட்களை காலாவதி தேதியை பார்த்து வாங்கி பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : Villupuram , Villupuram, garbage, expiration, pack of noodles, 7 cows killed
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...