×

ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை மீட்பு: சென்னைக்கு நாளை வருகிறது

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் திருக்கோயில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பாக 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த  ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை திருடப்பட்டது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் கடந்த 1982ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். ஆனால் திருடப்பட்ட நடராஜர் சிலையை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.  அதைதொடர்ந்து இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல்  தலைமையிலான போலீசார் திருடப்பட்ட நடராஜர் சிலை குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது, கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் கோயிலில் திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா நாட்டின் அருங்காட்சியகத்தில் இருந்தது தெரியவந்தது. இந்த சிலையை சர்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம்  ஆஸ்திரேலியா அரசுக்கு விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

பின்னர் ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து சிலையை தமிழகத்திற்கு கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுத்தனர்.  அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆஸ்திரேலியா நாட்டிற்கு  சென்று அந்நாட்டின் அருங்காட்சிய பதிவாளர் ஜேன் ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பென்னட் ஆகியோரிடம் 700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலையை நேற்று பெற்றனர். பின்னர் சிலையுடன் இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லிக்கு வருகின்றனர். அதைதொடர்ந்து ரயில் மூலம் நாளை காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சிலையை கொண்டு வருகின்றனர். அதன் பிறகு சிலைய  கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

Tags : Museum ,Natarajar ,Australia , Australia Museum, Statue of Natarajar, Chennai
× RELATED அருங்காட்சியக வளாகத்தில் சித்த மருத்துவ முகாம்