புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் உதவியாளராக இருந்த பெருமாளிடம் சிபிஐ அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், கடந்த 5ம் தேதி மாலை திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் வரும் 19ம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் மும்பை பைகுல்லா சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜியிடம் சிபிஐ விசாரணை நடத்த தடையில்லை என கடந்த இரு தினங்களுக்கு முன்பு அம்மாநில நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் மும்பைக்கு செல்ல எந்த நேரத்திலும் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திருப்புமுனையாக கடந்த 2007ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது அவரது உதவியாளராக இருந்த கே.வி.பெருமாளை சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். முதலாவதாக அவரது வீட்டிற்கு சென்ற சிபிஐ சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அதில், மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரிடம் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தருவதற்காக பல கோடி ரூபாய் கைமாறியது குறித்து விசாரித்து உள்ளனர். இதே விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் சிபிஐ அதிகாரிகளுடன் இணைந்து விசாரித்தனர். கே.வி.பெருமாளை கடந்த 2004ம் ஆண்டு முதல் 2010 வரை ப.சிதம்பரத்தின் உதவியாளராக இருந்தார். இதற்கிடையே, சிபிஐ விசாரித்த நிலையில், பெருமாள் இன்று மதியம் விசாரணைக்கு வரும்படி, அமலாக்கத்துறையும் சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் ஜாமீன் மனு
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விவகாரத்தில் ப.சிதம்பரம் தரப்பில் நேற்று ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கை பொருத்தமட்டில் எனது பெயர் குற்றப்பத்திரிக்கையில் இல்லை. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டு உள்ளேன். அதனால் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதேபோல், தற்போது வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற காவலையும் ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே கோரிக்கை கொண்ட மனு, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையில் ஆஜராகி விளக்கமளிக்க தயாராக உள்ளதாக ப.சிதம்பரம் தாமாக முன்வந்து தாக்கல் செய்த மனுவை சிபிஐ நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.