புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக கிடைத்த பொருட்கள் நாளை மறுதினம் ஏலத்தில் விடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே தனக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் பொருட்களை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவியாக வழங்குவார். பிரதமரான பின்னரும் அதை தொடர்ந்து வருகிறார்.தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருட்களை ஏலம் விட்டு கிடைக்கும் தொகையை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும்படி அவர் கூறியுள்ளார். அதன்படி, நாளை மறுதினம் பரிசு பொருட்கள் ஏலம் நடைபெற உள்ளது.
டெல்லியில் மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் அளித்த பேட்டியில், ‘‘பிரதமருக்கு பரிசாக தரப் பட்ட 2,772 பொருட்கள் வரும் 14ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. பொருட்களின் அடிப்படை விலை 200ல் இருந்து 2.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அதிக விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார் க்கப்படுகிறது’’ என்றார்.