கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே மோட்டூர் கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று, மழை வேண்டி கிராம மக்கள் ஒப்பாரி வைத்து வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். பருவமழை கைவிட்டதால் இப்பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணையும் வறண்டுவிட்டது. இதனால் விவசாயம் முற்றிலும் முடங்கிபோனதால் இப்பகுதி மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராம மக்கள் நேற்று, அங்குள்ள ஏரியில் ஒன்று திரண்டு, மழை வேண்டி பொங்கலிட்டனர். பின்னர், அவர்கள் ஒப்பாரி வைத்து வருண பகவானை வழிபட்டனர். இந்த நூதன வழிபாட்டால் மழை பொழியும் என்ற நம்பிக்கையில் கிராம மக்கள் உள்ளனர்.