டெல்லி: சிறு, குறு விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கும் 2.5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பட்ஜெட் தாக்கல் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பிரதான் மந்திரி கிஷான் மான் - தன் யோஜனா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயதுடைய சிறு குறு விவசாயிகள் இணையலாம்.
சேரும் வயதை பொறுத்து ரூ.55 தொடங்கி 200 ரூபாய் வரை செலுத்த வேண்டும். அதே அளவு தொகையை மத்திய அரசும் செலுத்தும். விவசாயிகள் 60 வயதை அடையும் போது மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும். நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை உள்ளடக்கிய இத்திட்டத்தை ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இதனிடையே ஆண்டுக்கு ரூ.6,000 என்ற குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தில் நாடுமுழுவதும் 8.5 கோடி விவசாயிகள் இணைந்துள்ளதாக வேளாண்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.