×

பாகிஸ்தானை சேர்ந்த 40 தீவிரவாதிகள் எல்லைத் தாண்டி காஷ்மீருக்குள் ஊடுருவல் : உளவுத்துறை எச்சரிக்கை

ஸ்ரீநகர் : ஜம்மு- காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 40 பேர் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இவ்விவகாரத்தில், சர்வதேச கவனத்தை பெறுவதற்கும் அந்நாடு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதையடுத்து சர்வதேச போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

எனினும் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறலுக்கு, இந்திய வீரர்கள் உடனடியாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.மேலும் ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த 40 தீவிரவாதிகள் எல்லைத் தாண்டி காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் ஆயுதப்பயிற்சி பெற்றவர்கள் என்றும் நவீன ஆயுதங்களை வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இன்று காலை காஷ்மீரின் சோபூரில் நடைபெற்ற என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மிக முக்கிய பயங்கரவாதி ஆசிப் எனபவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், சோபூரின் டேங்கர்பூரா என்ற இடத்தில் நடைபெற்ற தாக்குதலில் ஆசிப் முக்கிய குற்றவாளி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Terrorists, intelligence, alert, criminal
× RELATED உதகையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் 380...