கிருஷ்ணகிரி: அரசியலுக்கு அப்பாற்பட்டு தொழிற்சங்கங்கள் செயல்பட்டால் தொழிலாளர்கள் தங்கள் உரிமையை நிலைநாட்டுவதற்கு உதவியாய் இருக்கும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் தீரன் தொழிற்சங்க பேரவையை ஈஸ்வரன் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அரசியலால் பிரிந்திருக்க கூடாது என்றும் இதனால் தான் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளும் உரிமைகளும் கிடைக்காமல் உள்ளது என்று கூறினார். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டால் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அவர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு உதவியாய் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.