×

உள்ளூரில் நீரை சேமிக்க முடியாத முதல்வர்,இஸ்ரேல் சென்று நீர் சிக்கனம் பற்றி அறிய போவதாக கூறுவது வேடிக்கையானது : ஸ்டாலின் விமர்சனம்

சென்னை : உள்ளூரில் நீரை சேமிக்க முடியாத முதல்வர் பழனிசாமி, இஸ்ரேல் சென்று நீர் சிக்கனம் பற்றி அறிய  போவதாக கூறுவது வேடிக்கையானது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் திறந்து விடப்பட்ட மேட்டூர் நீர் கடைமடைக்கு சேராத நிலையில், கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட 20,000 கன அடி நீர் வீணாக கடலில் கலப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். கால்வாய்களை தூர்வருகிறோம் என்ற பெயரில் கமிஷனுக்காக மட்டுமே நிதி ஒதுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது அறிவித்த கொள்ளிடத்தில் 6 டிஎம்சி நீரை தேக்கி வைக்க நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையில் ரூ.480 கோடி மதிப்புள்ள கதவணை கட்டும்
திட்டம் இன்னும் கிடப்பிலேயே போடப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பொதுப்பணித்துறையை தம் பொறுப்பில் வைத்திருக்கும் முதல்வர் நீர் மேலாண்மையில் எவ்வித அக்கறையும் காட்டாததால் காவிரி தண்ணீர் பயன்படாமல் போவதாக ஸ்டாலின் கூறி இருக்கிறார். உள்ளூரில் உள்ள நீரை சேமிக்க முடியாமல் கடலில் கலக்க அனுமதித்து விட்டு உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக இஸ்ரேல் போகிறேன் என்று கூறுவது வேடிக்கை மிகுந்த வினோதமாக உள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Tags : Stalin ,CM ,Israel , Chief Minister Palanisamy, Stalin, Criticism, Door
× RELATED நாடு காக்க; நாளைய தலைமுறை காக்க;...