அமராவதி: ஆந்திரா: ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு எதிராக பேரணி மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட இருந்த தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நரசாபுறம், பல்நாடு, உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் முடிந்து 3 மாதங்களுக்கு பிறகும், தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேச கட்சியினருக்கும் இடையே மோதல் சம்பவம் நடந்து வருகிறது. அதாவது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தெலுங்கு தேச கட்சியினரை வேண்டுமென்றே பழிவாங்கும் விதமாக தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக அந்த பகுதியில் உள்ள தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த ஆதரவாளர்களும், பொதுமக்களும் குண்டூரில் உள்ள தெலுங்கு தேச கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் எங்கள் ஊருக்கு செல்வதற்கு எங்களுக்கு அச்சமாக இருப்பதாக தெரிவித்து வந்தனர். இந்நிலையில் போலீசார் கடந்த 2 தினங்களாக நடத்திய பேச்சுவார்த்தையில் நீங்கள் தங்கள் ஊருக்கு செல்ல உரிய பாதுகாப்பு வழங்குவதாக போலீசார் உறுதி அளித்தனர். ஆனால் இருப்பினும் நாங்கள் செல்ல முடியாது என கூறி வந்த நிலையில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்ல உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை முதல் தெலுங்கு தேச கட்சியினர் பலர் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்கள், உள்ளிட்ட பலர் சந்திரபாபு நாயுடு வீட்டிற்கு வந்தனர். இவர்கள் அனைவரையும் போலீசார் ஆஙகாங்கே கைது செய்தனர்.
இதனிடையே சந்திரபாபுவின் மகன் நரகொகேஷ் அவருடைய வீட்டில் இருந்து வெளியே வந்த போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி போலீசார் அவரை மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதே போல சந்திரபாபுவையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். அமைதியாக இருக்கும் கிராமத்தில் தெலுங்கு தேச கட்சியினர் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாக சட்ட ஒழுங்கை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு காணொளி காட்சி மூலமாக கட்சியினர் மத்தியில் பேசிய அவர்; தொடர்ந்து நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தாலும்,
இந்த சம்பவத்தை கண்டித்தும், மாநில போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும், மாநில அரசை கண்டித்தும் இரவு 8 மணி வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் நரசராவ்பேட்டா, சட்டேனாபள்ளி, குரஜாலா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.