சென்னை: சீருந்து இணைப்பு சேவைக்கும் மெட்ரோ ரயில் பயண அட்டை உள்ளவர்கள் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு போக்குவரத்து சேவைகளை நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், கடந்த மாதம் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சென்ட்ரல், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு, டி.எம்.எஸ், நந்தனம் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிதாக சீருந்து இணைப்பு சேவையை நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இந்த சேவை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் இயக்கப்படுகிறது. சீருந்து சேவையை பயணிகளிடம் கொண்டுசேர்க்க போதிய கவனம் செலுத்த வேண்டும் என மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தியது.
இந்தநிலையில், இந்த சீருந்து இணைப்பு சேவைக்கு மெட்ரோ ரயில் பயணிகள் மட்டுமே பயன்படுத்தும் பயண அட்டை மூலமே கட்டணம் செலுத்தும் நடைமுறையை நிர்வாகம் கொண்டுவந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். ரூ.100 செலுத்தி பெறப்படும் பயண அட்டையை பயன்படுத்தியே இந்த சீருந்து இணைப்பு சேவையை பயன்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே, மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்கும் பொருட்டு மெட்ரோ ரயில் பயண அட்டை உள்ளவர்கள் மட்டுமே பார்க்கிங் செய்ய முடியும் என்ற நடைமுறையை நிர்வாகம் கொண்டு வந்தது. தற்போது, சீருந்து இணைப்பு சேவைக்கும் இதே நடைமுறையை கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் சீருந்து சேவையை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர். எனவே, அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த சேவையை மாற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.