×

அரசு அறிவித்த 2,000 வழங்கும் திட்டம் என்னாச்சு?: ஏமாற்று அறிவிப்பா என மக்கள் கேள்வி

சென்னை: தமிழக முதல்வர் அறிவித்த 2,000 வழங்கும் திட்டம் என்னாச்சு.  அறிவிப்பு படி பணம் வழங்கப்படுமா அல்லது ஏமாற்று அறிவிப்பா என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் 60 லட்சம் பேருக்கு தமிழக அரசு சார்பில் தலா 2,000 நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இதையடுத்து, ஊரக மற்றும் நகர்ப்புற வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கான சிறப்பு நிதி உதவி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்தது. இதற்காக  அனைத்து மாவட்டங்களில் கலெக்டர் தலைமையில் 7 பேர் குழுவும் அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டது. இக்குழு பயனாளிகளை தேர்வு செய்து அரசிடம் ஒப்படைத்துள்ளது. எனினும் இந்த திட்டத்தை சென்னையில் உள்ள தலைமை  செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 32 பயனாளிகளுக்கு ரூ.2,000 சிறப்பு நிதி அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. 1200 கோடி மதிப்பிலான இந்த  திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ₹2000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முதல்வர் அறிவித்துள்ள இந்த சிறப்பு நிதி மக்கள் மீது அக்கறை கொண்டு அறிவிக்கப்பட்ட நிதி அல்ல, இது மக்களவை தேர்தலை மனதில் வைத்து கொண்டு வரப்பட்ட திட்டம் என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்றதால் வறுமை கோர்ட்டுக்கு கீழ் வாழும் ஏழைகளுக்கு தமிழக முதல்வர் அறிவித்த தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படவில்லை. தேர்தல்  பிரசாரத்தின்போது, தேர்தல் முடிந்ததும் உடனடியாக தலா 2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அறிவித்தனர். ஆனால் தேர்தல் முடிந்து 4 மாதம் ஆகி விட்டது. ஆனாலும் பணம் வழங்கப்படவில்லை.இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, “ தேர்தல் முடிந்து பல மாதம் ஆகியும் தமிழக அரசு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. தமிழக மக்களின் ஓட்டை பெறுவதற்காகவே இப்படி ஒரு அறிவிப்பை தமிழக  அரசு வெளியிட்டிருக்கலாம். இனி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அல்லது சட்டமன்ற தேர்தலுக்கு முன் வேண்டுமானால் இந்த திட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. எங்களின் ஒரே கேள்வி, தமிழக முதல்வர் அறிவித்த வறுமைக்கோட்டுக்கு  கீழ் உள்ள 60 பேருக்கு தலா ₹2 ஆயிரம் உண்டா? இல்லையா? அல்லது ஏமாற்று அறிவிப்பா? என்பது குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றனர்.

Tags : announcement ,government , What, government's , 2,000 offering?
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...