×

தனிப்பிரிவு ஏற்படுத்த கோரிய மனு தள்ளுபடி நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவு

மதுரை: நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென கூறியுள்ள ஐகோர்ட் கிளை, மாவட்டந்தோறும் தனிப்பிரிவு ஏற்படுத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.  மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  இந்தியாவிலேயே உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது.  தமிழகத்திலுள்ள நீர்நிலைகளை பராமரிப்பது, பாதுகாப்பது, ஆக்கிரமிப்பு அகற்றுவது சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டும், மதுரை கிளையும் ஏராளமான உத்தரவுகள் பிறப்பித்தும், இதுவரை அதிகாரிகள் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வரும்போது, தெரிந்தே தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர். இதனால் நீதிமன்றத்தின் பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைகிறது. எனவே, நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்ற மாவட்டந்தோறும் தனிப்பிரிவுகளை உருவாக்கவும், தவறும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர்.  அப்போது தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுவது அல்லது மேல்முறையீடு செய்வது சம்பந்தமாக தமிழக தலைமைச் செயலர் ஏற்கனவே ஒவ்வொரு துறையின் உயரதிகாரிகள், கலெக்டர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டருக்கு சட்டப்பிரிவிலும் ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்றார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்துவது குறித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆகியோர் அறிவுறுத்த வேண்டுமென ெதரிவித்தனர்.



Tags : governments ,ICT branch judges , Division, Petition dismissal, Icort Branch, Judges
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...