×

நங்கநல்லூர், ஆதம்பாக்கம் பகுதிகளில் காரில் வந்து செயின் பறிப்பு : ஆசாமிக்கு வலை

ஆலந்தூர்: நங்கநல்லூர் 22வது தெருவை சேர்ந்த மாலதி (62), நேற்று காலை தனது  வீட்டு வாசலில் உள்ள செடியில் பூ பறித்துக் கொண்டிருந்தபோது, காரில் வந்த ஒரு நபர், முகவரி கேட்பது போல் நடித்து, மாலதி கழுத்தில் கிடந்த 7 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினார்.
இதேபோல், ஆதம்பாக்கம்  வேளச்சேரி 100 அடி சாலையில்   நடைபயிற்சி செய்த 65 வயது மதிக்கத்தக்க முதியவரிடமும், காரில் வந்த மர்ம நபர் முகவரி கேட்பது போல் நடித்து அவரது கழுத்தில் கிடந்த ஒன்றரை சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினார்.

* செங்குன்றம் கிராண்ட் லைன், கனக துர்கா நகர், 1வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக புளியந்தோப்பு கார்பரேஷன் சாலையை சேர்ந்த பெரோஸ்கான் (23), வியாசர்பாடி சாமந்திபூ காலனி எஸ்எம்நகர் 2வது தெருவை சேர்ந்த இளையகுமார் (30) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து எடை மெஷின், பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
* ஆதம்பாக்கம் கக்கன் நகரில் உள்ள டீக்கடை பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த 17 ஆயிரத்தை கொள்ளையடித்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த வினோத் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* அம்பத்தூர் அடுத்த மேனாம்பேடு, வஉசி நகர், 9வது குறுக்கு தெருவை சேர்ந்த அரசு ஊழியர் கோவிந்தராஜூலு (56) என்பவரின் வீட்டு பூட்டை கள்ளச்சாவி போட்டு திறந்து, பீரோவில் இருந்த 12 சவரன் நகைகள், 15 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
* நுங்கம்பாக்கத்தை சேர்ந்த கேசவன் மனைவி சண்முகப்பிரியா (32). இவர், நேற்று முன்தினம் இரவு சென்னீர்குப்பத்தில் நடந்த விழாவில் பங்கேற்க கணவர், குழந்தைகளுடன் பைக்கில் புறப்பட்டார். பூந்தமல்லி மாநகர பேருந்து பணிமனை அருகே சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், சண்முகப்பிரியா கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
* திருவல்லிக்கேணி அயோத்தியா நகரை சேர்ந்த கனிமொழி (31), அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவரது கணவன் பாஸ்கர் ஆட்டோ டிரைவராக உள்ளார். குடும்ப தகராறு காரணமாக கனிமொழி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
7 பேருக்கு குண்டாஸ்: கஞ்சா மற்றும் திருட்டு வழக்கில் தொடர்புடைய செம்மஞ்சேரி 147வது பிளாக்கை சேர்ந்த பிரவீன் ஜோ (எ) கரி (22), கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய மேற்கு தாம்பரம் கன்னடபாளையம் காந்தி நகர் 2வது தெருவை சேர்ந்த ஜான் (எ) ஜான்சன் (33), கஞ்சா, திருட்டு உள்ளிட்ட 15 வழக்கில் தொடர்புடைய புளியந்தோப்பு பி.கே.காலனியை ேசர்ந்த ஆனந்தன் (56), கொலை வழக்கில் தொடர்புடைய திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையை ேசர்ந்த கில்பர்ட் ரவி (எ) ரவிச்சந்திரன் (38), வியாசர்பாடியில் ஜெயகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய கொலை குற்றவாளிகள் வியாசர்பாடி நேரு நகர் 2வது தெருவை சேர்ந்த திவாகர் (25), விக்‌னேஷ்வரன் (எ) டைசன் (28), ஜெயா (எ) ஜெபராஜ் (25) ஆகிய 7 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Tags : Nanganallur ,areas ,Adambakkam , Nanganallur, Adambakkam ,areas in the car
× RELATED திராவிடத்தை அழிக்கலாம் என்பது மக்களை...