×

விநாயகர் சிலை ஊர்வலத்தில் தகராறு வாலிபருக்கு அரிவாள் வெட்டு : 4 பேர் கைது

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு வெட்டு விழுந்தது. இதுசம்பந்தமாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பை சேர்ந்தவர் சிவகுமார் (18). இவர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அப்பகுதியில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினார். சில தினங்களுக்கு முன், சிலையை கரைப்பதற்காக பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது, தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகரை சேர்ந்த கார்த்திக் (19) என்பவரும், விநாயகர் சிலையை கரைக்க ஊர்வலமாக வந்துள்ளார். அப்போது, இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. ஊர்வலத்தில் வந்தவர்கள் சிவகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோரை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து, சிலையை கரைத்துவிட்டு வீடு திரும்பினர். ஆனால், ஆத்திரம் தீராத சிவகுமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திக்கை கொல்ல திட்டமிட்டார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு தண்டையார்பேட்டை ஐஓசி அருகே கார்த்திக் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு சென்று, கார்த்திக்கை அரிவாளால் வெட்ட முயன்றனர்.

சுதாரித்துக்கொண்ட கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனாலும், சிவகுமார் தரப்பினர் விடாமல் துரத்தி கார்த்திக்கின் நண்பர் அஜித் (20) என்பவரின் தலை, கை, கால்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். தகவலறிந்து ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த அஜித்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கியிருந்த சிவகுமார் (18) கிரிதரன் (19), சஞ்சய் (19), சரவணன் (18) ஆகியோரை கைது செய்தனர். பின்னர், அவர்களை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுசம்பந்தமாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags : persons ,Ganesh , 4 persons arrested, riot , Ganesh statue
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...