×

நாட்டில் உள்ள கவர்னர்களில் இளையவர் தமிழிசை; மூத்தவர் ஹரிசந்தன்

புதுடெல்லி: நாட்டில் உள்ள கவர்னர்களில் மிக இளையவர் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் (58). மூத்தவர் ஆந்திர கவர்னர் பிஸ்வ பூஷன் ஹரிசந்தன் (85). தெலங்கானா கவர்னராக தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை நியமித்து கடந்த 1ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து, தெலங்கானா மாநிலத்தின் 2வது கவர்னர் மற்றும் அந்த மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமை தமிழிசைக்கு கிடைத்துள்ளது. அவருக்கு 58 வயது ஆகிறது. இதனால், 60 வயதுக்கு உட்பட்ட நாட்டின் இளைய கவர்னர் என்ற பெருமையும் தமிழிசைக்கு கிடைத்துள்ளது. இரண்டாவது இளைய ஆளுநர் என்ற பெருமை, குஜராத் கவர்னராக உள்ள ஆச்சார்யா தேவ்ராத்துக்கு கிடைத்துள்ளது. இவரது வயது 60.

பல்வேறு மாநிலங்களில் கவர்னராக உள்ளவர்களின் வயது 70 முதல் 79க்கு இடைப்பட்டதாக உள்ளது. ஒரு கவர்னர் 60 வயதுக்கு உட்பட்டவராகவும், 7 பேரின் வயது 61 முதல் 69 ஆகவும் உள்ளது. 14 பேரின் வயது 70 முதல் 79 ஆகவும், 80 வயதுக்கு மேற்பட்ட கவர்னர்கள் 6 பேரும் உள்ளனர். இதில், முதலிடத்தில் இருப்பவர் ஆந்திரா கவர்னர் ஹரிசந்தன். அவருக்கு வயது 85. 2வது மூத்த கவர்னராக மத்திய பிரதேசத்தின் லால்ஜி தாண்டன் (84) உள்ளார். அசாம் மற்றும் மிசோரம் கவர்னராக உள்ள ஜெக்தீஷ் முகியின் வயது 76. நாட்டில் உள்ள 28 கவர்னர்களில் 19 பேர் முதல்முறையாக கவர்னர் பதவி வகிப்பவர்கள். 9 பேர் ஏற்கனவே வேறு மாநிலங்களில் கவர்னராக பதவி வகித்தவர்கள். 6 பேர் பெண் கவர்னர்கள். ஆந்திர பிரதேச கவர்னராக பதவி வகிக்கும் ஹரிசந்தன், பாஜவை சேர்ந்தவர். ஒடிசா உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியை தொடங்கிய அவர் கடந்த 1971ல் பாரதிய ஜன சங்கத்தில் சேர்ந்தார். எமர்ஜென்சி காலத்தில் இவர் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்.



Tags : governors ,country ,Harisandan , Governors, youngest Tamils, eldest Harisandan
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...