திருவனந்தபுரம்: அகில இந்திய தொழிலாளர் சங்க வேலை நிறுத்தத்தின்போது ரயில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுக்கு ஒரு நாள் சிறை மற்றும் ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து கடந்த ஜனவரி மாதம் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்பட தொழிற்சங்கங்கள் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதையொட்டி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டமும் நடத்தினர். கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
இதனால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கண்ணூர் அருகே பையனூரில் அந்த பகுதி சிபிஎம் எம்எல்ஏ கிருஷ்ணன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் கிருஷ்ணன் எம்எல்ஏ உள்பட 49 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு பையனூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் உள்பட 49 பேருக்கும் ஒரு நாள் சிறையும், தலா ரூ.2,500 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அவர்கள் மாலை வரை நீதிமன்றத்திலேயே இருக்க நீதிபதி உத்தரவிட்டார்.